Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மார்ச், 2012

கரண்ட் கட்!!

கரண்ட் கட்!!

ஜெனரேட்டர் ஆட்சியில்
ஜெ முதல் மந்திரி


மின்மினி வெளிசத்தை
நகர குழந்தைகள் ரசிக்க செய்யும்

நிலவின் ஒளியை
மீண்டும் கவனிக்க செய்யும்

உழைக்காதவரையும்

வியர்வை சிந்தவைக்கும்


படித்தவரை

புத்தகம் மறக்க செய்யும்

21 ஆம் நூற்றாண்டிலும்
கற்காலம் தலை காட்ட வைக்கும்

ஆனால்

டாஸ்மாக் பக்கம் மட்டும்
கூட்டம் குறைக்க தடுமாறும்
:-)

தமிழக அரசின் இப்போதைய இரண்டு கண்கள் -  டாஸ்மாக் , மின்சாரம்






கரண்ட் கட்!! 


அம்மாக்களுக்கு கிரிகெட்டிலிருந்தும்
அப்பாக்களுக்கு மெகா தொடரிலிருந்தும்
பிள்ளைகளுக்கு செய்திகளிலிருந்தும்
விடுதலை !




திங்கள், 19 மார்ச், 2012

பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்


பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்

அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்!

இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.

தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.

எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.

விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.

சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம். மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!

பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!

விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!

தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?

காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!

இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை. ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.

இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!

போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.

'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?

தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?

ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?

மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா? இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?

'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?

கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்க

முடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர். இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.

இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.

இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்​கையுடன்,

தமிழருவி மணியன்


சனி, 14 ஜனவரி, 2012

ஜருகண்டி



கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..  

கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள.. 
இறை.. தேடிய.. தனிமை அறை

திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட.. 
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை 
"ஜருகண்டி"   !!

மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து, 
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை 
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...



ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??

சனி, 22 அக்டோபர், 2011

உனக்கென மட்டும்

உனக்கென மட்டும் கண்கள் விழித்ததடி.
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,

இன்னும்...... மயக்கம் என்ன?




திங்கள், 17 அக்டோபர், 2011

கூரை , நான் , கொசு வலை


ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன் 
உண்மையான அர்த்தம்...

கவலையில்லை 
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...

என் கவலை .... 
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?




மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!

சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..


என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...

கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....


கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்


புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மாற்றம்

"நீ சுத்தமா மாறிட்ட"
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?

நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,

மாற்றம் ஒன்றே நிரந்திரம்..

புதன், 22 ஜூன், 2011

வாழ்க்கையெனும் சாலை

வாழ்க்கையெனும் சாலையில் 
முயற்சிகள் எல்லாம் மைல்கற்கள்
வெற்றியும் தோல்வியும் திசைக்காட்டிகள்
இலக்கு ?
திசைக்காட்டிகள் முடிவு செய்யும் சிலருக்கு
மைல்கற்கள் முடிவு செய்யும் சிலருக்கு...

திசைகளும் மைல்களும் மறந்து 
போகும் சாலை எதுவாயினும்
விபத்துகளின்றி போனால் போதும் 
என்ற எண்ணமே பலருக்கு....  :-)

திங்கள், 20 ஜூன், 2011

ஒன்றினுள் ஒன்று

தூக்கம்
தினம் தினம் .. சுகம்
நிரந்தரமானால்... சோகம்..


கனவு
உழைப்பாளியின் வரம்
சோம்பேறியின் சாபம்


வரம்
வாழ்க்கை புரிந்தவனுக்கு மகுடம்,
வாழ்க்கை தொலைத்தவனுக்கு பாரம்


சாபம்
நிரந்தர தூக்கத்தை எண்ணி,
இன்று சுவாசிக்க மறக்கடிக்கும் எண்ணம்..


பயம்
எண்ணங்கள் புவி அளவு படர
புவியின் பாரத்தை மனதில் சுமக்க
பாரமே எண்ணங்களாகி
பின், வாழ்க்கையே பாரமாகும் - பயம்

வியாழன், 20 ஜனவரி, 2011

வாழ்வில் வென்றிட

வாழ்வில் வென்றிட வேதாத்ரி மகரிஷி சொன்ன ரகசியம்... :-)

"முடியும்! முடியும்! என்னால் முடியும்,
முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வாழ்வேன்! வாழ்வேன்! சிறப்பாய் வாழ்வேன்,
வாழ்வேன்! வாழ்வேன்! என் மனம் ஒன்றி வாழ்வேன்,

தருவேன்! தருவேன்! அள்ளித் தருவேன்,
அன்பையும் கருணையும் அள்ளித் தருவேன்,

நான் தன்னம்பிக்கை மிக்கவன்,
நான் ஆற்றல் மிக்கவன்,
நான் சக்தி மிக்கவன்,
நான் சுறுசுறுப்பானவன்,
நான் சந்தோஷமானவன்,
நான் கனவுகளை நிஜமாக்குபவன்,

முடியும்! முடியும்! என்னால் முடியும்,

முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!"

என்பதை இரவு தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் 1 வருடம் தொடர்ந்து சொன்னால்.... வாழ்வில் வெற்றி நிச்சயமாம்!!!

இதை முயற்சி செய்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!!


திங்கள், 10 ஜனவரி, 2011

உழவர் திருநாள் - உதவி திருநாள்

ஏழை விவசாய குடும்பங்கள் உழவர் திருநாள் கொண்டாடிட...
நாம், ஆளுக்கோர் ஏழை விவசாய குடும்பத்தை தத்தேடுத்தால் என்ன??

உங்கள் கருத்து.. ??

விவசாயிகளுக்கென்று இயங்கும் நிறுவனங்கள் இதனை செய்கின்றனவா??
விவசாயிகளை நேரடியாக சென்றடையும் தளங்கள் ??

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??

வெள்ளி, 31 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புது வருடம் ..... 2011
புதிய தினங்கள்...
புதிய சிந்தனைகள்.....
புதிய தேடல்கள்....
புதிய முயற்சிகள்.....
புதிய அனுபவங்கள்.....
புதிய வெற்றிகள்...

உங்கள் வாழ்வில் மலர ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

சனி, 10 ஜூலை, 2010

சரி... நீங்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?

Pakistan suicide blasts in Mohmand 'kill more than 100'
Iraq suicide bomb attack kills five
8 injured in train derailment following blast in NE India

மேல் உள்ள தலைப்பு செய்திகளில் ஓர் ஒற்றுமை - இவையாவிலும் பலியானவர்கள் எல்லோரும் உன்னை - என்னை போன்ற...சராசரி மனிதர்கள்.

ஓர் சராசரி மனிதனின் உயிரை கொன்று இவர்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?
அரசாங்கத்தை / அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஏன் சராசரி மனிதனே பலியாகிறான்?

சராசரி மனிதனின் உயிரை ஓட்டு எண்ணிக்கையாக மட்டும் கருதும் அரசாங்கத்தின் / அரசியல்வாதிகளின் மனதில் இந்த உயிர் பலிகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எண்ணுகிறார்க்ள்??

முகம் தெரியாத அரசாங்கம்
பல முகங்கள் கொண்ட "இவர்கள்"
நடுவில்..
முகம் தெரியாதவனின் அக்கறையின்மையில்..
தினம் தினம் "இவர்களின்" பயத்தில்..
கல்லறையை நோக்கி எனது தின வாழ்க்கை...
நான் ஒரு சராசரி மனிதன்..

ஞாயிறு, 20 ஜூன், 2010

தோல்வி நிலையென நினைத்தால்...



தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடிந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் விடிந்தும்
மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

புதன், 13 ஜனவரி, 2010

சேவல்!!

சேவல்!!


செவ்வாய், 12 ஜனவரி, 2010

கோபம் ஊடல் காதல்

கோபம்


















கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....

ஊடல்



















உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.

நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்

காதல்


நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..

சொல்லாமல் சொல்லினாள் - காதல்!