திங்கள், 30 நவம்பர், 2009

கடவுள் 2.0?

காடுகளில் சுற்றி அலைந்த மனிதன்...
இன்று நிலவில் தண்ணீர் கண்டுபிடிக்கும் அளவு செல்ல ஓரே காரணம்..

மாற்றம் 

மனித இனத்தின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும்... மனிதன் தனது இன்றைய நிலையிலிருந்து வேறு நிலை அடைய நினைக்கும் - "மாற்றமே"  எந்நேரத்திலும் காரணமாக இருப்பதை நாம் உணரலாம்...

இந்த நூற்றாண்டில் மட்டும் மனித இனத்தின் வளர்ச்சி (மாற்றம்) மிகவும் பிரமிக்கவைக்கிறது...
கிட்டதட்ட எல்லா துறைகளிலும் மாற்றம் கண்ட மனிதன்... 
கடவுளில் மட்டும் மாற்றம் விரும்பாமல் இருப்பது ஏன்??
 
இந்து கடவுள்களான .. .
பிரம்மா, விஷ்ணு,சிவன்,பிள்ளையார்,முருகன், பார்வதி, சரஸ்வதி,காளி,அம்மன் ... சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருவதற்கான சான்றுகள் உள்ளன..

அதே போல் புனித மேரி,கிருஸ்து, நபிகள் நாயகம்,புத்தர் போன்ற கடவுகளும் /கடவுளின் பிரதிநிதிகளும் சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருகின்றனர்.

நாம் சாமியார்கள் கடவுளாக வணங்கபடுவதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ... 

நமது மிக இளைய கடவுளுக்கு வயது - சில நூற்றாண்டுகளாக இருக்கும்..

இது மிகவும் வியப்பாக உள்ளது.. 
  
எல்லாவற்றிலும் மாற்றம் விரும்பும் மனிதன் தனது நம்பிக்கைகளில் மட்டும் மாற்றம் விரும்பாதது ஏன்??

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்:

பெரும்பாலான கடவுள்கள் எப்போதும் புராணங்களில் இருந்தே தோன்றினர்..ஏனோ இன்றைய உலகில் புராணங்கள் யாரும் எழுதுவதில்லை... எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடமில்லை...இதனால் புதிய கடவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை...

சாமியர்களை கடவுளாக்கி.....உலகில் தோன்றும் நிஜக்கடவுள்களை.. நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.. 

"கடவுள் ஒன்று"  என்று உலகம் நம்புவதால்...  புதிய கடவுள் படைக்க எந்த ஒரு அவசியமும் இல்லாமல் இருக்கலாம்...

கடவுள் எல்லாம் ஏமாற்று வேலை என்று நம்பும் பகுத்தறிவு கூட்டம் அதிகமானதால்... புதிய கடவுளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே இல்லாமல் இருக்கலாம்..

தினம் தினம் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டுகின்றன... ஆனால் அவைகள்/அவர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாக மாற .. வெகு காலம் (நூற்றாண்டுகள்) பிடிக்கும்... இதனால் நம்மால் புதிய கடவுள்களின் வளர்ச்சியை எளிதில் கண்டுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்....

நமது கடவுகள் / நம்பிக்கைகள் மாற்றும் உரிமை நம்முடையது...
அப்படி காலத்திற்கேற்ப கடவுகளை மாற்றியமைக்கும் பொருப்பும்..நம்முடையது...

கடவுளும் மாறுவார் / மாற்றப்படுவார்...
இதுவே இயற்கையின் நியதி..

கடவுள் 2.0  (GOD Redefined) 

வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரர் தினம்






மாவீரர் தினம் இன்று!!
போன ஆண்டு மாவீரர் தினத்தில் 
நம்முடன் இருந்த வீரர்கள் பலர்..
இன்று மாவீரர்கள்...


அமையப்போகும் ஈழத்தின், வரலாற்றில் 
நீங்கா இடம் பெற்றுவிட்டார்கள்.


இந்தியா 1857 - சிப்பாய் கலகத்தில் இருந்த அதே நிலையில்
இன்றைய ஈழம்..
அடுத்தக் கட்டம் மக்கள் புரட்சி 
அதுவும் இன்னும் சில வருடங்களில் வந்தடையும்..


வாழ்க தமிழ்!

செவ்வாய், 24 நவம்பர், 2009

நிச்சயமாக ஆண்கள் என்றுமே ஆண்கள் தான்!!


திங்கள், 23 நவம்பர், 2009

நண்பர்களா? உறவினர்களா?

என் அப்பா , அம்மா பிறந்து வளர்ந்த திருநெல்வேலியிலிருந்து பிழைப்பு தேடி 1977ல் வந்த இடம் - சென்னை. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்..

பள்ளி விடுமுறையில் திருநெல்வேலி எக்பிரஸில் .. ஜன்னலோரம் அமர்ந்து..கண்ணிமைக்காமல்..ஒவ்வொரு ஊர் பலகையையும் வாசித்தப்படி போவது.. வருடமா வருடம் நான் செய்த யாத்திரை...

சிறு வயதில் ..ஊரில் பல முறை . "மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறேன்" என்று சொல்லும் பொழுது..பல முகங்களில் "நிலாவில் இருந்தா வந்திருக்கிறாயா".. என்பது போன்ற ஆச்சர்யம் எனக்கு முதலில் விசித்தரமாக ..இருந்தது..

பின் இதுவே பழகி போன பின் , செல்லமாக மாறியது..
சிறு பிள்ளையாக என் அத்தை , சித்தப்பா குழந்தைகளுடன் நான் எங்கு சென்றாலும், நான் எனோ தனித்தே கவனிக்கப்பட்டேன்..
இதனாலேயே, எனது உறவினர்களின் குழந்தைகளுக்கு நான் ஏதோ ஒரு வி.ஐ.பி போல் காட்சியளித்தேன்..
அவர்கள் விளையாட்டில் என்னை சேர்த்துக்கொண்டாலும்.. ."இவனுக்கு இது தெரியாது.. இன்னொரு முறை விளையாடட்டும்" என்று பலமுறை விதிவிலக்கு அளிக்கப்பட்டது..
எனது சித்தப்பா கைப்பிடித்து தாமிரபரணியில் குளிக்கும் உரிமை சிறு குழந்தைகளுள் எனக்கு மட்டுமே இருந்தது...

இவை யாவும் மறந்து, பின்பு மீண்டும் திருநெல்வேலி எக்பிரஸ் பிடித்து சென்னை செல்ல மனமில்லாமல் சென்னை வந்தடைவது..தனிக்கதை.

ஆனால் எனது பத்தாம் வகுப்பிலிருந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது... படிப்பு காரணம் , நான் ஊருக்கு செல்வதை தவிர்க்க நேர்ந்தது...
பின் படிப்பு மட்டுமே பிரதானமாகிட, நான் ஏதோ மாநிலத்திலே முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன் போல்... நடித்து.. என்னுடைய பள்ளி விடுமுறைகளை சென்னையின் திரையரங்குகளில் நண்பர்களுடன் கழித்தேன்..

வருடங்கள் காற்றில் மாட்டிக்கொண்ட நாட்காட்டிய போல் பறந்து சென்றன..
கல்லூரி முடித்தேன்... வேலையிலும் சேர்ந்தேன்..
ஊரின் ஞாபகம் .. ஊரிலிருந்து உணவினர்களுடன் வரும் சாந்தி சுவீட்ஸ் அல்வா பொட்டலங்கள் பார்த்தால் மட்டுமே...
மற்ற நேரங்களில்.. எனக்கு என்று ஒரு உலகை அமைத்துக்கொண்டிருந்தேன்..
வாரம் இருமுறை நண்பர்களுடன் இரவு நேர காட்சி, பின் டீ கடை
மற்ற நேரங்களில் நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு..
95% உருப்படாத சென்னை இளைஞரில் நானும் ஐக்கியமானேன்..

பின் சில முறை ...
"சொந்த ஊர் எது" என்ற கேள்விக்கு "சென்னை" என்று பதிலளிக்க தொடங்கினேன்..

என் அப்பா , அம்மாவை விட நான் திருநெல்வேலியிலிருந்து வெகு தூரம் வந்திருப்பதை பல முறை உணர்ந்தேன்..
ஆனால் அதை மாற்றி அமைத்திட நான் எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாக நினைவும் இல்லை..

என் உலகில் எனது அப்பா,அம்மா, தம்பி,நண்பர்கள் ,நண்பர்களின் குடும்பம் மட்டுமே மனிதர்களானர்..
ஏனோ இந்த உலகில்..
சிறு வயதில் நீச்சல் சொல்லிக்கொடுத்த சித்தப்பாவோ, சுடச்சுட இட்லி பரிமாறிய அத்தைகளோ சேர்க்க தவறினேன்..

இது எப்படி நடந்தது என்று சிந்திக்கு தொடங்கிய போது...
என் உறவனிர்கள் மத்தியில்... "சென்னையின் புது பணக்காரர்கள்" வரிசையில் சேர்க்கப்பட்டேன்..
நான் செய்தது என்னமோ... லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கி தவிக்கும் அதே ஐ.டி வேலை தான்..
நான் இந்த பிரிவை சரி செய்திட எந்த முயற்சி எடுக்காதது என் சோம்பேறிதனத்தினால் மட்டுமே!
இது திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் இருக்கும் என் உறவினர்களுக்கு தெரிந்திருப்பது.. நியாயம் இல்லை தான்...


இது எல்லாம் என் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.. சென்ற ஆண்டு செப்டம்பர் வரை..

சென்ற செப்டம்பர் மாதம்
என் அப்பா வழி அத்தையின் கணவர் இறக்க நேர்ந்தது..
அதே வாரம்
என் 25 வருட நண்பனின் அப்பாவும் இறக்க நேர்ந்தது..

நான் இருந்ததோ மங்களூரில்..
இரண்டும் முக்கியமானவர்கள் தான்..
ஆனால் நான் ஒருமுறையோ - இருமுறையோ பார்த்த மாமாவை விட..
என் வாழ்க்கையில் தினமும் நான் சந்தித்து பேசிய என் நண்பனின் அப்பாவின் மரணம் முக்கியமானதாக தோன்றியது..

என் அப்பா,அம்மா என் அத்தையிடம் துஷ்டி விசாரிக்க திருநெல்வேலி சென்றனர்.
நான் என் நண்பனிடம் துஷ்டி விசாரிக்க சென்னை வந்திறங்கினேன்.

இது நடந்து ஒரு வருடம் இருக்கும்..

இந்நிலையில் ..
இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ற போது..
ஊரில் இருந்து சாந்தி சுவீட்ஸ் அல்வா பொட்டலத்துடன் சித்தப்பா வந்திருந்தார்...
அவரை கண்டதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது..
ஆனால் ஏனோ.. .அந்த அளவு சந்தோஷம் அவருக்கு இல்லை..
நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு அர்த்தம் தரும் வகையில் பதிலளித்தார்..

சட்டென்று ..
"உங்களுக்கு என்ன ஆச்சு? நல்லா தான இருந்தீங்க" என்றேன்..
அதற்கு..
"உனக்கு தேவ பட்டா மட்டும் சொந்தம் வேணும்.. மத்த நேரம் உனக்கு எங்கள பத்தி ஞாபகம் எங்க" என்றார்.

"அப்படி எல்லாம் இல்லை.. நீங்களே என்னமோ கற்பனை பண்ணிக்காதீங்க" என்றேன்..

"சரி..
உனக்கு சொந்தம் முக்கியம்னா ..
உங்க மாமா இறந்த போது ... அப்பா,அம்மா கூட வரவேண்டியது தானா..
அத விட்டிடு .. சென்னைக்கு உன் Friend அப்பா இறந்ததை கேட்க வந்தது எப்படி நியாயமாகும்" என்றார்..

"நான் ஒரு முறை பார்த்த மாமாவை விட..
என்னை வளர்த்த பக்கத்து வீட்டு நண்பனின் அப்பா எனக்கு முக்கியமாக பட்டார்" என்றேன்..

இது சித்தப்பா முகத்தில் மீதமிருந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கியது..

இதற்கு பின் சித்தப்பா.. என்னிடம் பேசியதை நிறுத்திக்கொண்டார்..
பின்..எல்லா வேலை முடிந்து திருநெல்வேலி செல்லும் சமயம்..

"சொந்தங்களும் வேணும்னு நினை" என்று சொல்லி... வருத்தத்துடன் சென்றார்...

15 வருடங்களுக்கு முன் சிரித்த முகத்துடன் தாமிரபரணியில் என் கைப்பற்றி அழைத்து சென்ற என் சித்தப்பாவையும் என் உறவினர்களையும் ......நான் தொலைத்துவிட்டதை உணர்ந்தேன்..

அந்த நொடி ...
என் மனதில் தோன்றிய ஒரு கேள்வி..

"நண்பர்களா? உறவினர்களா?"

நகரங்களுக்கு பிழைப்பு தேடி வந்து தங்கள் சொந்தங்கள் தொலைத்த என் பெற்றோருடன் சேர்த்து..என் பக்கத்து வீடு நண்பனை குடும்பமாக்கிய .. எனக்கு இன்று இந்த கேள்விக்கு விடை தெரியவில்லை...

:-(

ஞாயிறு, 22 நவம்பர், 2009

வருடத்தின் சிறந்த "ராக்" பாடல்

இந்த வருடத்தின் சிறந்த ராக் பாடல், கடந்த 17ஆம் தேதி வெளியிடபட்டது..
இது இசை பிரியர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது..
அதுவும் "Them Crooked Vultures" குழுவின் முதல் பாடல் தொகுப்பு என்பது குறிப்பிடதக்கது.



இதேப்போல் இந்த வருடத்தின் சிறந்த நேரடி பாடல் நிகழ்ச்சி , "Faith No More" குழு மெக்ஸிகோ சிட்டியில் சென்ற வாரம் நடத்திய நிகழ்ச்சி என்று கூறுகின்றனர் இசை பண்டிதர்கள்.


ஐந்து வருட கிராஃபிடி - 3D

ஐந்து வருட கிராஃபிடி - 3D

இந்த ஐந்து வருட Time Lapse (இதற்கு தமிழில் என்ன சொல்வார்கள்)?? காணொளி (இனி "வீடியோவிற்கு" பதில் காணொளி தான்) வியப்பளிக்கிறது!!

Serge Gainsbourg - animation des graffitis sur 5 ans du mur rue de Verneuil from Arnaud Jourdain

கால்பந்தும் உலக அரசியலும்

சில நாட்களுக்கு முன் நடந்த உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் பிரான்ஸும் ஐயர்லாந்தும் மோதின,
இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருக்க, ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் அணியின் தலைவர் தியேரி ஆண்றி தன் கைகளை பயன்படுத்தி பந்தை நிறுத்தி, பின் பிரானஸ் இரண்டாம் கோல் அடிக்க உதவி செய்தார்...

கால் பந்தில் , பந்தை கைகளால் தடுப்பது தவறு என்று அறிந்திருந்தும்.. பின் அதை நடுவரிடம் சொல்லாமல் மறைத்ததும்.. அவரின் மேல் பெரும் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது...

அவர் தன் கைகளால் பந்தை நிறுத்தியதை கீழுள்ள வீடியோவில் காணலாம்..


இதை குறித்து தியேரி ஆண்றி அளித்த பதிலையும் நீங்கள் காணலாம்..


இது போன்று நடப்பது இதுவே முதல் முறையும் அல்ல..
1986ல் டியகோ மாரடோனா இங்கலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இது போன்ற ஒரு கோல் அடித்தது உலக அறிந்த உண்மையே...


ஆனால் இந்த முறை தொலைக்காட்சியின் வளர்ச்சியும் , இணையத்தின் வளர்ச்சியும் தியேரி ஆண்றியின் இந்த ஏமாற்றுத்தனத்தை மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கின்றன...

ஐயர்லாந்து பிரதமர் கூட இந்த போட்டியை மீண்டும் நடத்தக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்..

இது கால்பந்திற்கும் உலக அரசியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிறது..

1969ல் எல் சால்வேடர் ஹோண்டுரஸ் இடையே நடந்த கால்பந்து போட்டிகள், அவ்விருநாடுகளுக்குமிடையே போர் ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இதனை "கால்பந்து போர்" (Soccer War) என்றனர்..

இதே போன்று 1990ல் குரேட்சிய - செர்பிய அண்களுக்கான கால்பந்தாட்டமே அவ்விரு பிரிவினருக்கும் இடையேயான பகைமை எனும் திரியை பற்ற வைத்ததாக கால்பந்து ஆர்வலர்கள் நம்புகின்றனர்...

மக்கள் பொழுதுப்போக்காக கருதிய ஒரு விளையாட்டு, எப்படி அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியது என்று ஆழ்ந்து நோக்கினால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..