சனி, 14 ஜனவரி, 2012

ஜருகண்டி



கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..  

கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள.. 
இறை.. தேடிய.. தனிமை அறை

திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட.. 
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை 
"ஜருகண்டி"   !!

மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து, 
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை 
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...



ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??

திங்கள், 24 அக்டோபர், 2011

நிழல்

நான்:

காலை முதல் மாலை வரை
சில நேரம் என்னை பின் தொடர்ந்து.....
சில நேரம் என்னை வழி நடத்தி....
ஒரு பொழுதும் என்னை விட்டு பிரியா ... என் நிழல்..நண்பா..
இரவில் மட்டும் ... நீ எங்கே ?

நிழல்:

நாள் முழுதும்.... உன் உருவத்தில்.. அடைப்பட்ட நான்...
பரந்து ...விரிந்தேன்..
உனக்கு இரவை கொடுத்தேன்....

நாள் முழுதும்... நான் உன் காலடியில்..
இரவு.. முழுதும்... நீ என் காலடியில்...

சனி, 22 அக்டோபர், 2011

உனக்கென மட்டும்

உனக்கென மட்டும் கண்கள் விழித்ததடி.
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,

இன்னும்...... மயக்கம் என்ன?




திங்கள், 17 அக்டோபர், 2011

கூரை , நான் , கொசு வலை


ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன் 
உண்மையான அர்த்தம்...

கவலையில்லை 
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...

என் கவலை .... 
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?




மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!

சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..


என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...

கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....


கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்


புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

போதும் ... போதாது

போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..

போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...

போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??